உடலுக்கு ஒரு டைம் டேபிள்!

‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது பழமொழி. நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், நாம் எந்தப் பணியையும் செய்ய முடியும். தூக்கம் உடலுக்கு மிக அவசியம். உடலுக்கும் மனதிற்கும் முழுமையான ஓய்வைத் தரும் ஒரு உன்னதமான விஷயம்தான் தூக்கம். தினமும் 3 வேளை உணவும், குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கமும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

‘அது என்ன 6 மணி நேரத் தூக்கம்... ஏன் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்... நேரம் தவறாமல் ஏன் சாப்பிட வேண்டும்...’ என்று விதண்டாவாதமாகக் கேள்வி எழுப்புபவர்களுக்காகவே இந்த விளக்கம்! நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் தங்களது சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்கின்றன. அந்த நேரத்தில் அதற்கேற்ற வகையில் நமது உடல் ஓய்வாக இருக்க வேண்டியது அவசியம்.

இரவு 9 மணி முதல் 11 வரை

இந்த நேரம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் நேரம். உடலில் உள்ள தேவையற்ற, அதிகப்படியான ரசாயனங்களை வெளியேற்றும் பணியை அது அப்போது செய்யும். எனவே, இந்தச் சமயத்தில் நாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். இல்லையெனில் அமைதியாக அமர்ந்து பாடல் கேட்கலாம். இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலைசெய்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

இரவு 11 மணி முதல் 1 வரை

ஈரல் தனது வேலையைச் செய்யத் துவங்கும் நேரம் இது. இந்த நேரத்தில் விழித்திருக்க நேரிட்டால், ஈரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

நள்ளிரவு 1 மணி முதல் 3 வரை

இந்த நேரத்தில் கல்லீரல், தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. இந்த நேரம் மிகவும் ஆழ்ந்து உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் சுலபமாகப் பணி செய்யும்.

அதிகாலை 3 மணி முதல் 5 வரை

இந்த நேரத்தில் நுரையீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்யும். எனவேதான் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும், இந்த நேரத்தில் அதிகமாகக் கஷ்டப்படுவார்கள். இருந்தாலும், அதிகாலையில் ஆழ்ந்து உறங்கினாலே போதும்... இருமல் இயற்கையாகவே சரியாகிவிடும்.

காலை 5 மணி முதல் 7 மணி வரை

இந்த நேரத்தில் பெருங்குடல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. எனவே, இந்த நேரத்தில் நமது வயிறு காலியாக இருப்பதோ, அல்லது தண்ணீர் மட்டும் பருகி இருப்பதோ நல்லது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை

சிறுகுடல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும். எனவே, இந்த நேரத்திற்குள்ளாகக் காலை உணவை முடித்திருக்க வேண்டியது அவசியம். வேலை காரணமாக இதற்கு முன்பாகத் தினம் தினம் காலை உணவை எடுத்துக் கொண்டால், சீக்கிரமே குடல் நோய் தாக்கும். அதே சமயம் 7.30 மணிக்குள் காலை உணவைச் சாப்பிட்டால், நாம் திடகாத்திரமாக வாழலாம். காலை உணவைத் தவிர்க்கும் பலர் உள்ளனர். அவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டு, குறைந்தபட்சம் 9 முதல் 10 மணிக்குள் தங்களது காலை உணவை முடிக்க வேண்டும்.

தாமதமாக உறங்கி, காலையில் வெகு தாமதமாக எழுந்திருப்பதால், நமது உடலில் இருந்து தேவையற்ற ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் பணி வெகுவாக பாதிக்கிறது.

மேலும் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரைதான், எலும்பு மஜ்ஜையில் ரத்தம் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. எனவே நேரத்திற்குத் தூங்கச் செல்ல வேண்டியது நமது உடலின் ரத்த உற்பத்திக்கும் அவசியமாகிறது.

இந்த ஆரோக்கிய டைம்டேபிளை இன்றிலிருந்தே கடைப்பிடிக்க முயற்சிப்போம்.

       

crossmenu